Wednesday, September 21, 2011

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!

பெருமக்களே, மாணவர்களே, இளைஞர்களே,
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
 
எண்ணங்கள் செயலாகின்றன.
ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.
ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்

செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.
ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். 
இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் 
வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும்

மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த
வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.


நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு

இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்

உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.



நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்

பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய். நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன், படித்தேன். வளர்ந்தேன்,

வளர்ந்து கொண்டே இருக்கிறேன். நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள். இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,
கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்
வெற்றியடைய முடியும். என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும், என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம். அவரது வீட்டில் தான் மின்சாரம்

இருந்தது, பரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன். எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்
இருந்தாலும், ஓர் ஒற்றுமை இருந்தது. அது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான். எனவே, நாங்களும் நண்பர்களாக இருந்தோம். நானும், என்
நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.

1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம். இரவில் அவரது

வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம். படித்து, படித்து முன்னேறினோம். பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லை. அது
எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,

நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய

உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
மாணவ நண்பர்களே, உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், கலெக்டர், ஆசிரியர், தொழில் அதிபராக கனவு
காண்கிறீர்கள்? எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும், சந்திரனிலும், செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்? 



கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன், அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர், டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.


எத்தனை பேர் சந்திரனுக்கும், வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன், அனைவரும் கையைத் தூக்கினார்கள். எத்தனை

பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.
அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்
வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார். லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார். இன்னொரு மாணவன் - இளைய சமுதாயத்தை என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன், அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை
உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார். எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன்.


எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.

எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது. அதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய

சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.



பூமிக்கு கீழே, பூமியிலே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா

60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா. ஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. கனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,

இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும். அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.

அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா. அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அது என்னவென்றால், அதற்கு ஓரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி


 

கற்பனை சக்தி

கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது

கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறது? தெரியுமா?..........
மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன

வேண்டும், ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.

மனத்தூய்மை


எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்

நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.


மனத்தூய்மை எங்கிருந்து வரும். மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார்? அவர்கள் தான் தாய், தந்தை மற்றும்

ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.

உள்ள உறுதி



புதிய எண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளது. எனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன். முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

 
நண்பர்களே, உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி வரும், யார் மூலம் வரும். நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், ந்ல்ல புத்தகங்கள்

இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும். அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,
நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்.

நீங்கள் என்னை
www.abdulkalam.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி என் உரையை முடிக்கிறேன்.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.


Thanks-Thatstamil



Post Comment

7 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

எம்மாம்பெரிய பதிவு.... சிறந்த கட்டுரையை பகிர்ந்துள்ளீர்கள்.

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் ஞானேந்திரேன். நல்ல பகிர்வு.

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்
உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.

உண்மைதானே?

Unknown said...

உங்கள் படங்கள் அருமை வாழ்த்துகள்

இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

J.P Josephine Baba said...

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம். ///

Anonymous said...

கலாம் உரையை பிரிண்ட் பண்ணி வைத்திருக்கிறேன்...நன்றி நண்பரே...